பொய் முகங்கள் !



நீங்க
சைவமா?
அசைவமா?
வீட்டு உரிமையாளர் கேட்டார்.

உன் குலதெய்வம் என்னப்பா ?
வேலை கேட்ட இடத்தில்
ஓட்டல் முதலாளி கேட்டார்
வலிக்கவில்லை ;

வலித்தது
முற்போக்காளர்கள்
கூட்டம் முடிந்து
அவரின் நண்பரிடம்
அறிமுகம் செய்யும் போது
  ‘இவரும் உங்க ஆளு தான்’
என்ற போது !!
;-(

மெய்ப்பிக்கத் தேவையில்லை !

போலிகள் தான்
போராட வேண்டும் ;
உண்மைக்கு ஒருபோதும்
தன்னை மெய்ப்பிக்கத் தேவையில்லை !
*

அடுத்து வரலாம்....


தலித்
எழுத்தாளராம்.
அடுத்து
வரலாம்..

கவுண்டர்  -செட்டியார்- கோனார்
தேவர் -வன்னியர் -வெள்ளாளர்
எழுத்தாளர்கள்..!
*

ஏதோ ஒரு கவிதை


புத்தகக் கடையில்
கவிதை புத்தக வரிசையில்
சிக்கும் கவிதை நூலில்
புரட்டி பார்க்கும் ஏதோ
ஒரு கவிதை தான்
முடிவு செய்கிறது ,
அது கடையை விட்டு
வாசகன் வீட்டுக்கு போவதா
இல்லையாவென்று
எந்த கவிதை என்பது
வாசகனுக்கும்
வார்த்தவனுக்கும்
சம்பந்தபட்ட விசயம்
நமக்கென்ன ?
*

திருவாய்ச்செடிக்குளத்தில்


கபடி
கோலி
கிரிக்கெட்
எல்லாம்
என்னோடு தான்
விளையாடினான்;
கணீர் குரல்
கரகரக்கும் வயது
அவனாகவே தான் விலகினான்
மெல்ல மெல்ல
அவள்களோடு நூறாங்குச்சியும்
தாயமும் பிடித்துப்போனதவனுக்கு
நாலுமூல அத்தாச்சியும்
அவன் ப்ரியமானது
கூடப் பெரிதாகப்படவில்ல,
திருவாய்ச்செடிக்குளத்தில்
 
தனியே குளிக்கையில் மாராப்பு
கட்டிக்கொண்டவனை
பார்த்தமாத்திரம் தான் புரிந்தது
அவன் மூணாம் பாலினம் ஆகிப்போனது
பதற்றத்தில் அவன்/ள்
அம்மாவிடம் சொல்லப்போனால்
விம்மி அழுதவள்
வெளில சொல்லிடாதே 
எனக்கும் தெரியுமென்கிறாள் !
*